ஈராக் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகையான எனாஸ் தலேப் பெண்களின் உடலமைப்பு மீது சர்ச்சைக்குரிய கட்டுரையை பதிவிட்டுள்ள பிரிட்டிஷ் செய்தித்தாளான தி எகனாமிஸ்ட் மீது வழக்குத் தொடர உள்ளார்.
ஏனெனில், “அரபு நாட்டு பெண்கள் ஏன் ஆண்களை விட பருமானாக இருக்கிறார்கள்?” என்ற தலைப்பில் கடந்த ஜூலை மாதம் கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஈராக்கில் நடந்த பாபிலோன் சர்வதேச விழாவில் எடுக்கப்பட்ட நடிகை எனாஸ் தலேப்பின் புகைப்படத்தையும் அட்டைப்படமாக வைத்திருந்தது இணையவாசிகள் உட்பட பல தரப்பினரை கொதிப்படையச் செய்திருக்கிறது.
நடிகை தலேப்பின் படம் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகவும், இது அவரது தனியுரிமையை மீறிய செயல் என்றும் என்றும், தி எகனாமிஸ்ட் செய்தியில் இருக்கும் படம் போட்டோஷாப் செய்யப்பட்டவை என்றும் அவர் கூறியதாக BBC செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தில் வெளியிடப்படுவதற்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாகவும் நடிகை சுட்டிக்காட்டினார். "நான் ஒரு பிரபலம் மற்றும் பொது நபர் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. நெருக்கடிகளை ஆதாயங்களாக மாற்ற முடியும்"
இது அரபுநாட்டு பெண்களை குறிப்பாக ஈராக் நாட்டு பெண்களை அவமதிக்கும் வகையில் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது என அல்-அரேபியா டிவிக்கு அளித்த பேட்டியில் தலேப் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
மேலும், தி எகனாமிஸ்ட் வெளியிட்டுள்ள கட்டுரைக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அதனால் எனக்கு நேர்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியதால் இழப்பீடுக்கான நடவடிக்கையும் எடுத்துள்ளேன் என நடிகர் எனாஸ் தலேப் தெரிவித்திருக்கிறார்.
இதுபோக, சமூக வலைதளங்களிலும் தி எகனாமிஸ்ட் வெளியிட்டுள்ள கட்டுரைக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. அதன்படி, “இனவெறி, பாலியல் தொடர்பான பதிவுகளையே தொடர்ந்து ஏன் வெளியிடுகிறது என தி எகனாமிஸ்ட் செய்தி விளக்கம் அளிக்குமா?” என ஒரு பயனர் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோல, “எனாஸ் தலேப் தி எகனாமிஸ்ட் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. நானும் வளைவு நெளிவுகள் கொண்ட உடலை பெற்ற அரபு பெண்களில் ஒருவர்தான். இதில் ஆண்களுடன் தொடர்புபடுத்த எந்த அவசியமும் இல்லை” என மற்றொரு பயனர் பதிவிட்டிருக்கிறார்.