ஈரானின் black list ! இந்திய கப்பலுக்கு ஆபத்து!
செய்தியாளர் - M. மீரா
பாரசீக வளைகுடா நீரிணை ஆணையத்தின் (PGSA) ஈரானிய விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், 45 கப்பல்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்தால் இயக்கப்படும் 'மகா ரூஸ்' (Maha Roos) என்ற சரக்குக் கப்பலும் அடங்கும். மேலும், இந்த அடையாளப் பட்டியலில் உள்ள சில கப்பல்கள் இந்தியாவுக்கு எரிசக்திப் பொருட்களை ஏற்றிச் சென்ற வரலாற்றை கொண்டுள்ளன.
கடல்சார் ஆவணங்களின்படி, கருப்புப் பட்டியலில் உள்ள பெரும்பாலான கப்பல்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) தளமாகக் கொண்ட நிறுவனங்களுடன் தொடர்புடையவை.
கத்தார், சவுதி அரேபியா, தென் கொரியா, மால்டா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் நிறுவனங்களுடன் தொடர்புடைய கப்பல்களும் இதில் அடங்கும்.
பாகிஸ்தான் கொடியுடன் இயங்கும் 'மர்தான்' (Mardan) என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
பட்டியலில் உள்ள கப்பல்களுடன் ஒத்துழைக்கும் எந்தவொரு கப்பலும் அதே கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என PGSA எச்சரித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியே செல்வதற்கான ஈரானிய ஏற்பாடுகளை மீறிய கப்பல்கள், இனிவரும் காலங்களில் இப்பாதையைப் பயன்படுத்தும்போது அபராதம், தடுத்து நிறுத்தம் அல்லது பறிமுதல் போன்ற கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என PGSA தன் 'எக்ஸ்' (X) தளத்தில் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட விரும்புபவர்கள் தகுந்த காரணங்களுடன் PGSA-விடம் முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தாக்குதல்களும் கேப்லர் தரவுப் பகுப்பாய்வும்
பிப்ரவரி இறுதியில் மோதல் தொடங்கியதிலிருந்து, ஹார்முஸ் நீரிணையின் வடக்குப் பகுதியில் உள்ள தனது அங்கீகரிக்கப்பட்ட வழித்தடத்தைப் பயன்படுத்த ஈரான் வற்புறுத்தி வருகிறது.
UKMTO அமைப்பின்படி, இத்தாக்குதல்கள் ஓமன் கடற்கரைக்கு அப்பால் அமெரிக்க ஆதரவு பெற்றதும், ஆனால் ஈரானால் தடை செய்யப்பட்டதுமான பாதையிலேயே நடந்துள்ளன.
கேப்லர்' (Kpler) கண்காணிப்புத் தரவுகளின்படி, பட்டியலில் உள்ள 39 சரக்குக் கப்பல்கள் மார்ச் முதல் குறைந்தது ஒரு முறையாவது இந்த நீரிணையைக் கடந்துள்ளன. 'அல் பஹ்யா' (Al Bahyah) என்ற டேங்கர் கப்பல் 12 முறை கடந்துள்ளது; ஜூலை மாதச் சம்பவத்தில் இதன் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
பதிவு செய்யப்பட்ட 170-க்கும் மேற்பட்ட பயணங்களில், 75 பயணங்களின் அடுத்த இலக்காகவும் 70 பயணங்களின் சரக்கு ஏற்றப்பட்ட இடமாகவும் ஐக்கிய அரபு அமீரகத் துறைமுகங்கள் இருந்துள்ளன.
ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளும் பறிமுதல் அச்சுறுத்தல்களும் சர்வதேசக் கடல்சார் வர்த்தகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

