”இந்த முறை தோட்டா தவறாது” - 2024 படத்தைப் பகிர்ந்து ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்!
”இந்த முறை தவறாது” என 2024 படத்தைப் பகிர்ந்து ட்ரம்புக்கு ஈரான் அரசு தொலைக்காட்சி மிரட்டல் விடுத்துள்ளது.
ஈரானில் பொருளாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக டிசம்பர் 28இல் தொடங்கிய போராட்டம், கமேனி ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான பரந்த போராட்டமாக உருமாறியுள்ளது. இதில் அமெரிக்கா தலையீடு இருப்பதாகக் குற்றஞ்சாட்டும் கமேனி, அதற்கு எதிராக ஒருபோதும் தாம் பின்வாங்கப் போவதில்லை என எச்சரித்துள்ளார். எனினும் அவருக்கு எதிராகப் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 3500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தவிர, தாக்குதல் நடத்துவது தொடர்பாகவும் ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில், ஈரான் அரசு தொலைக்காட்சி, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நேரடி கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது காயமடைந்த ட்ரம்பின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஈரான் அரசு தொலைக்காட்சி, ‘இந்த முறை இலக்கைத் தோட்டாக்கள் தவறவிடாது’ எனக் குறிப்பிட்டுள்ளது. இது, அமெரிக்காவைத் தவிர, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு புறம், ஈரானில் நிலவி வரும் அசாதாரணமான சூழல் காரணமாக அந்நாட்டின் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் சர்வதேச விமானச் சேவைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் FlightRadar24 தளத்தின் தகவல்படி, தற்போது ஈரானின் வான்பரப்பில் வணிகரீதியான விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றம் காரணமாகப் பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களும் ஈரானைத் தவிர்த்து பாதுகாப்பான வான்வெளிகள் வழியாகச் சுற்றுப் பாதையில் செல்வதால், உலகளாவிய விமான அட்டவணைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

