சமூக ஊடகங்களில் டிரம்ப்பை விமர்சிக்கும் ஈரான் தூதரகங்கள்!
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக அந்நாடு தனது ஆயுதப் படைகளைத் திரட்டி பதிலடி கொடுத்து வருகிறது. இந்தப் போர் 5-ஆவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் நொடிக்குநொடி பதற்றம் நீடித்து வருகிறது.
சமீபத்தில் நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஈரானுக்கு எதிராக போர் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு முதலில் கூறியவர் தனது பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் தான் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.
பீட் ஹெக்ஸெத் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்றதிலிருந்து, பத்துக்கும் மேற்பட்ட உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளை நீக்கி வருகிறார். கடற்படையின் உயர்மட்ட சீருடை அதிகாரியான அட்மிரல் லிசா ஃபிரான்செட்டி மற்றும் விமானப்படையின் இரண்டாம் நிலைத் தலைவரான ஜெனரல் ஜிம் சில்ஃப் உள்ளிட்ட உயர்மட்ட இராணுவத் தலைவர்களை ஹெக்ஸெத் நீக்கியிருந்தார். கடைசியாக ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜ் தனது பதவியை ராஜினாமா செய்து உடனடியாக ஓய்வு பெறுமாறு பீட் ஹெக்ஸெத் கேட்டுக்கொண்டுள்ளார். இதை, பென்டகனும் உறுதிப்படுத்தியுள்ளது
இந்த நடவடிக்கைகளை கேலி செய்யும் விதமாக ஈரானின் தென்ஆப்பிரிக்கா தூதரகத்தின் x தளத்தில் ஆட்சி மாற்றம் வெற்றிகரமாக நிகழ்ந்தது என்று தலைப்பிட்டு நிர்வாகத்திலிருந்து நீக்கப்பட்டவர்களின் ஒளிப்படங்களை பகிர்ந்துள்ளது
மற்றுமொரு பதிவில் ஒவ்வொருவருக்கும் ஒரு சாதனை உண்டு என்று தலைப்பிட்டு ரொனால்ட் ரீகன் நான் சோவியத் யூனியனை அழித்தேன் என்றும் டிரம்ப் நான் அமெரிக்காவை அழித்தேன் என்றும் கூறுவது போல் பதிவிட்டிருக்கிறார்கள்
ஈரானை "கற்காலத்திற்கு" திருப்பி விடுவதாக பீட் ஹெக்ஸெத் விடுத்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, போரில் ஒரு ரோமானியப் பேரரசரை வென்ற பாரசீகப் பேரரசரான முதலாம் ஷாபூரின் பாறைச் சிற்பத்தை ஈரானின் இங்கிலாந்து தூதரகத்தின் x தளத்தில் பதிவிட்டிருக்கிறது.

