எண்ணெய் - எரிவாயு பற்றாக்குறை.. உலகுக்கு ஈரான் எச்சரிக்கை!
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலால் தொடங்கிய போரில், ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான், எதிரிகளுக்கான போக்குவரத்தை முடக்கியுள்ளது. அதிபர் ட்ரம்ப், தடை நீக்கப்படாவிட்டால் எரிசக்தி உள்கட்டமைப்புகளை தாக்குவேன் என மிரட்ட, ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலைத் தொடங்கின. இந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனால் போர் உக்கிரமடைந்தது. இந்தப் போர் 5-ஆவது வாரமாக தொடரும் நிலையில், மத்திய கிழக்கில் நொடிக்குநொடி பதற்றம் நீடித்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் போக்குவரத்தை ஈரான் முழுமையாகக் கட்டுப்படுத்தி, அது தனது எதிரிகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதுவரை, சீனாவைத் தவிர இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளும், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய்க் கப்பல்களை அவ்வழியாகச் செல்ல அனுமதித்துள்ளன.
இந்நிலையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி மீதான தடை நீக்கப்படாவிட்டால், அதிலுள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். நாளை (ஏப்ரல் 7) ஈரானில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் ஒரே நேரத்தில் குறிவைக்கப்படும். இதற்கு முன்னெப்போதும் கண்டிராத ஒன்றாக இருக்கும். அந்த நீரிணையை (ஹார்முஸ்) திறந்துவிடுங்கள், இல்லையென்றால் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று கெட்ட வார்த்தை பயன்படுத்தி ட்ரம்ப் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார். .
இதனைத் தொடர்ந்து ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய போது, இன்று ஓர் ஒப்பந்தம் எட்டப்பட நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படாவிட்டால், அனைத்தையும் தகர்த்துவிட்டு எண்ணெயைக் கைப்பற்றுவது குறித்தும் தான் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
இதற்கு பதிலளித்திருக்கும் ஈரான், மின் உற்பத்தி நிலைய தினம் என அழைக்கப்படுவது, அடுத்த நாள் பிராந்தியத்தில் மின்வெட்டு நாளாக இருக்கும் என்பதையும், அதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டு உலகிற்கே எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஆண்டாக இருக்கும் எனவும் பதிவிட்டுள்ளது, மேலும் ட்ரம்ப் உலக அமைதிக்கும் எரிசக்திப் பாதுகாப்புக்கும் ஓர் அச்சுறுத்தல். என்றும் 25ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஒரு காரணத்திற்காகவே உள்ளது என்றும் பதிவிட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்த போருக்கு ஈரான் சூட்டிய பெயரான உண்மை வாக்குறுதி 4 (#TruePromise4) என்ற ஹேஷ்டேக்கும் இடம்பெற்றிருந்தது.
25ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஒரு காரணத்திற்காகவே உள்ளது என்று எழுதியிருப்பது ஒரு குடியரசுத் தலைவர் இறக்கும்போது, பதவி விலகும்போது, அல்லது கடமைகளை ஆற்ற முடியாத சூழ்நிலைகளைக் கையாளும் அமெரிக்க அரசியலமைப்பின் விதியைக் குறிப்பிடுகிறது.

