ஈரானில் கடுமையாக இருந்த பெண்களுக்கான ஆடை கட்டுப்பாட்டில் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு கடுமையான ஆடை கட்டுப்பாடு நடைமுறையில் இருந்து வந்தது. அதன்படி அவர்கள் தலையை மூடியபடி தளர்வான, நீளமான ஆடைகள் அணியவேண்டும். அதிக அளவில் ஒப்பனை செய்து கொள்ளக்கூடாது. நெய்ல் பாலீஷ் போடக்கூடாது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் கைது செய்யப்படுவார்கள்.
இந்த ஆடை கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டு இருப்பதாக டெக்ரான் நகர தலைமை காவல்துறை அதிகாரி ஹோசீன் ரகிமி அறிவித்தார். அடக்க ஒடுக்கமாக உடை அணியாத பெண்களுக்கு மென்மையான முறையில் ஆலோசனை வழங்கப்படும் என்றும், மற்றபடி அவர்கள் மீது கைது நடவடிக்கையோ, வழக்கு தொடரும் நடவடிக்கையோ எடுக்கப்படாது என்றும் அவர் கூறினார். எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது பற்றி ஆலோசனை மையங்கள் மூலம் பெண்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.