ஈரான் பிடியில் F-35 விமானி..? அமெரிக்க மீட்பு முயற்சி தோல்வி!
ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய ஐந்தாவது வாரத்தில், மேம்பட்ட அமெரிக்க F-35 போர் விமானம் IRGC வான் பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியானது. விமானி வெளியேறி ஈரான் உள்ளே தரையிறங்கியதாகவும், அவர் IRGC காவலில் இருக்கலாம் என ஊடகங்கள் கூறுகின்றன. அமெரிக்க மீட்பு முயற்சி தோல்வியடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலைத் தொடங்கின. இந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனால் போர் உக்கிரமடைந்தது. இந்தப் போர் ஐந்தாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் நொடிக்குநொடி பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை மேற்கு ஈரான் மீது பறந்த அமெரிக்க F-35 ரக போர் விமானத்தை இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) வான் படை தாக்கிய போது விமானத்திலிருந்து வெளியேறிய விமானி ஒருவர், IRGC-யின் காவலில் இருக்கலாம் என ஈரானிய ஊடக நிறுவனமான தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இரண்டாவது அமெரிக்க F-35 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று அதன் விமானியின் கதி என்ன ஆனது என்பது குறித்து பரவலான யூகங்கள் தொடர்கின்றன.
ஈரானின் அரசு மற்றும் பகுதி-அரசு செய்தி நிறுவனங்கள், விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளன. அதே சமயம், அவர் சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா இதுவரை இதுகுறித்து எந்த அறிக்கையும் விடவில்லை
ஈரானின் உயர்மட்ட இராணுவப் பிரிவான ஐ.ஆர்.ஜி.சி (இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை), இன்று அதிகாலையில் ஒரு மேம்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தை அழித்தது, அதிலிருந்த விமானி வெளியேறி நாட்டின் உள்ளே தரையிறங்கினார்" என்று ஏப்ரல் 3 அன்று தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்
தங்கள் விமானி உயிருடன் இருக்கலாம் என நம்பும் அமெரிக்கர்கள், அவரை ஈரானின் எல்லையைக் கடந்து வெளியே கொண்டுவர மேற்கொண்ட முயற்சியை ஈரானிய ஆயுதப் படைகள் முறியடித்ததாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது . அந்த விமானி ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் என சில வட்டாரங்கள் கூறுவதாக மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானியால் விமானத்திலிருந்து வெளியேற முடியவில்லை எனவும் மற்றொரு அறிக்கை தெரிவித்தது.
முன்னதாக மார்ச் 19ஆம் தேதி ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு, எஃப்-35 விமானம் அவசரமாகத் தரையிறங்கியதாகவும் விமானி பாதுகாப்பாக உள்ளார் என்றும், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

