ஈரான் | முகமது நபி அவமதிப்பு.. பிரபல பாப் பாடகருக்கு மரண தண்டனை.. அமீர் ஹொசைன் மக்சூட்லூ யார்?
ஈரானைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகர் அமீர் ஹொசைன் மக்சூட்லூ (37). உடல் முழுவதும் பச்சை குத்தியிருக்கும் இவர், 'டாட்டாலூ' என அழைக்கப்படுகிறார். ராப், பாப் மற்றும் R&B ஆகியவற்றை இணைக்கும் வகையில் அவர் உடல் முழுதும் பச்சை குத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் இவர் ஏற்கெனவே, ஈரானின் அரசியல் மற்றும் சமூகப் பழக்கவழக்கங்கள் குறித்துப் பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த நிலையில், அவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. விபசாரத்தை ஊக்குவித்தல், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தது உள்ளிட்ட வழக்குகளும் அவர்மீது தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 10 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, பாடகருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், மரண தண்டனை விதித்து கடந்த ஜனவரியில் தீர்ப்பு வழங்கியது. தற்போது இந்த தீர்ப்பை அது உறுதி செய்துள்ளது.
யார் இந்த அமீர் ஹொசைன் மக்சூட்லூ?
1987, செப்டம்பர் 21 அன்று ஈரானின் தெஹ்ரானில் பிறந்த அமீர், குடும்ப கஷ்டம் காரணமாக சிறுவயதிலேயே பல்வேறு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். என்றாலும் பள்ளிப் படிப்பிற்கு இசையிலும் ஆர்வம் காட்டினார். 2003ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட முதல் பாடல், அவரது வாழ்க்கையின் தொடக்கத்தை வெளிப்படுத்தியது.
2014 FIFA உலகக் கோப்பையில் ஈரானிய தேசிய கால்பந்து அணிக்காக, அவர் ஒரு பாடலைப் பாடியபோது உலகம் முழுவதும் பிரபலமானார். 2015இல், ஈரானிய சார்பு அணுசக்தி பாடலான எனர்ஜி ஹஸ்டியை வெளியிட்டார். இந்தப் பாடல் பாரசீக பிரபலமான கூகுள் தேடலில் முதலிடத்தில் இருந்தது. எனினும், இந்தப் பாடல் உடனடியாக ஈரானில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2016ஆம் ஆண்டில், இஸ்லாமிய விதிகளை மீறுவதாகக் கருதப்படும் பாடல் வரிகள் மற்றும் வாழ்க்கை முறையை விளம்பரப்படுத்தியதற்காக அந்நாட்டு காவல்துறையினரால் அமீர் கைது செய்யப்பட்டார்.
2018ஆம் ஆண்டில், அவர் துருக்கிக்குச் சென்று, அங்கு ஆல்பங்களை உருவாக்கி பெரிய இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். ’2020ஆம் ஆண்டில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று அவர் கூறியபோது அவர் மீண்டும் கவனத்தை ஈர்த்தார். அவரது முதல் ஆல்பமான சைர் ஹம்காஃப் 2021இல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு, அவர் 21 ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். யுனிவர்சல் மியூசிக் குழுமத்துடன் இணைந்து பணியாற்றிய முதல் ஈரானியர் இவர்தான். 2023ஆம் ஆண்டில் துருக்கிய அதிகாரிகளால் அவர் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன்பின்னர் ஈரானில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.