ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கிறதா? ஆம் என்ற அமெரிக்க உளவுத்துறை அதிகாரி; உளவுத்துறை தவறு என்ற டிரம்ப்!
'ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கிறது' என்பது தான் இஸ்ரேல் - ஈரான் தாக்குதலின் முக்கிய பின்னணி.
ஆனால், இந்தக் கூற்றுக்கு அமெரிக்க உளவுத்துறையின் இயக்குநர் துளசி கப்பார்டு, “ஈரான் தயாரிக்கவில்லை” என்று கடந்த மார்ச் மாதம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும், அவர் தெரிவிக்கையில், "ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கவில்லை. ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி 2003, அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தின் நிறுத்தத்திற்கு பிறகு, மீண்டும் அதை அங்கீகரிக்கவில்லை" என்று கூறியிருந்தார்.
நியுஜெர்ஸியில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் கூறியிருந்தது குறித்த கேள்விக்கு, தனது உளவுத்துறை தகவல் தவறு என மறுப்பு தெரிவித்தார். மேலும், தான் நிர்ணயித்த இரண்டு வார காலக்கெடு என்பது, ஈரானைத் தாக்குவது குறித்த முடிவை இரண்டு வாரங்களுக்குள் எடுப்பதற்காகவே தவிர, இரு வாரங்களுக்குப் பிறகு எடுப்பதற்கானது அல்ல என்றும் கூறினார்.
போரில் இஸ்ரேல் சிறப்பாக செயல்படுகிறது, ஈரானின் செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார். மேலும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தளர்த்த எந்த முயற்சியும் எடுக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், அமெரிக்க உளவுத்துறை இயக்குநரின் கருத்திற்கும், அமெரிக்க அதிபர் பேச்சிற்கு பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், இதற்கு துளசி கப்பார்டு எதிர்வினை ஆற்றினார். அதில், “ மீடியாக்கள் நான் கூறியதைத் திரித்து கூறிவிட்டது. நான் சொன்னதைத் தான் அதிபர் ட்ரம்பும் கூறியுள்ளார். ஈரான் யுரேனியத்தின் கையிருப்பை அதிகரித்து வருகிறது. அணு ஆயுதம் இல்லாத நாட்டிற்கு இது தேவையில்லாத ஒன்று" என்று கூறியுள்ளார்.