ஒரேநாளில் 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான்.. மீண்டும் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்!
புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணையில் ஒரேநாளில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரான் - அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளால், பேச்சுவார்த்தை தற்காலிகமாக முடங்கியுள்ளது. இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஒரேநாளில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரின் அல் ரெகாயத் திரவ இயற்கை எரிவாயு கப்பல் மற்றும் சவுதி அரேபியாவின் 'வெட்யான்' கச்சா எண்ணெய்க் கப்பல் உட்பட மூன்று வணிகக் கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஓமன் கடல் பகுதி வழியாகச் சென்ற இந்தக் கப்பல்களை, பாதுகாப்பு உடன்படிக்கையையும் மீறி ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில், அல் ரெக்காயத் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அக்கப்பலின் என்ஜின் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து கப்பலில் இருந்த 4 இந்தியர்கள் உட்பட 29 பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்கள் தங்களிடம் பதிவுசெய்து, தங்களது அதிகாரப்பூர்வ வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், அமெரிக்க கடற்படையின் வழிகாட்டுதலின்படி, கப்பல்கள் ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்தியதே இத்தாக்குதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்களுக்கு ஈரான் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. எனினும், தங்களது எச்சரிக்கைகளை மீறிச் சென்றதாலேயே கத்தார் நாட்டு எரிவாயுக் கப்பல் தாக்கப்பட்டதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் முழுப் பொறுப்பு என்று குற்றம்சாட்டியுள்ள கத்தார், இது சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறிய செயல் என்றும் கண்டித்துள்ளது. அதேநேரத்தில், இத்தாக்குதல்கள் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக எண்ணெய் விற்பனை சலுகை உரிமத்தை அமெரிக்கா ரத்து செய்தது. தவிர, இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானின் பந்தர் அப்பாஸ், கெஷ்ம் தீவு மற்றும் சிரிக் ஆகிய பகுதிகளில் உள்ள ஈரானிய ராணுவ மற்றும் ஏவுகணை இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதனால், மத்திய கிழக்குப் பகுதியில் மீண்டும் போர்ப் பதற்றம் நிலவுகிறது.

