பதிலுக்குப் பதில் | அடுத்தடுத்து அமெரிக்க ராணுவத் தளங்களை அழித்த ஈரான்!
மத்திய கிழக்கில் தொடர்ந்து போர்ப் பதற்ற்ம் நிலவி வரும் நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய அடுத்த சில மணிநேரங்களிலேயே அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் ஈரானும் தாக்குதல் நடத்தியது. இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய பிப்ரவரி மாத தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்பட்டது. தொடர்ந்து, இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. அதேநேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வந்தது. மேலும், எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்களையும் நடத்தியிருந்தது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவமும் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகுகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், புதிய அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடா முழுவதும் அந்நாட்டுடன் தொடர்புடைய ராணுவத் தளங்கள் மீது ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள பல இடங்களில், ஈரானிய ஏவுகணை அமைப்புகள், வான் பாதுகாப்புத் தளங்கள் மற்றும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையால் (IRGC) இயக்கப்படும் சிறிய வேகப் படகுகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்திற்குப் பிறகு இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இராணுவம் (IRGC), ’குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஒருங்கிணைந்த ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் பேட்ரியாட் அமைப்பு, வெடிமருந்துக் கிடங்கு மற்றும் ரேடார் தளம் ஆகியவற்றைத் தனது அழிவுகரமான ஆளில்லா விமானங்களைக் கொண்டு அழித்துள்ளோம்.
மேலும், இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அமெரிக்காவை எச்சரித்துள்ள ஈரான், "இந்தத் தாக்குதல்கள் மீண்டும் நடந்தால், நாங்கள் இன்னும் கடுமையாகப் பதிலடி கொடுப்போம்" எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரானைச் சுற்றி போர் விமானங்கள், கடற்படைக் கப்பல்கள், ஒருவழித் தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா கடல் ட்ரோன்களைப் பயன்படுத்தி டஜன் கணக்கான இலக்குகளைத் தாக்கியதாக, அமெரிக்க மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

