ஈரானில் பெய்துவரும் கன மழையினால் அங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு செய்திநிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “வெப்பமயமாதலால் ஏற்படும் திடீர் பருவநிலை மாறுபாடுகளால் தற்போது ஈரானில் கடும் மழை பெய்துவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 19 நாட்களாக அங்குபெய்துவரும் கன மழையினால் இதுவரை 791 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.
மார்ச் 19 ஆம் தேதி தொடங்கிய கனமழையால் 1900 கிராமம் மற்றும் நகரங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் 15 மாகாணங்களில் 2,199 கிராமச் சாலைகளும் 84 பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 141 ஆறுகளின் கரைகள் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 400க்கும் அதிகமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் 12 ஆயிரம் கி.மீ. தொலைவு சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் நாட்டின் 36 சதவீத தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் 86 ஆயிரம் பேர் அங்கிருந்து அவசர முகாம்களுக்கு குடி பெயர்ந்துள்ளனர் எனவும் அரசு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகளின் செய்தித் தொடர்பாளர் பெஹ்னம் சாயீடி தெரிவித்தார். வெள்ளத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிக்கியுள்ளதாக ஈரானிய ஊரக அமைச்சர் அப்துல்ரேஸா ரெஹ்மானி ஃபாஸ்லி தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் இடத்தை விட்டு வெளியேறுமாறும் ஆண்கள் மற்றும் இளைஞர்களிடம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என மாகாண ஆளுநரான கோலாமிராஸா ஷரியாத்தி தெரிவித்தார்.” என செய்திகள் வெளியாகியுள்ளன.