மலேசிய இளவரசருடன் 16 வயதில் திருமணம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு பேசிய மாடல் அழகி!
இந்தோனேசிய-அமெரிக்க மாடலான மனோஹரா ஒடெலியா, மலேசிய இளவரசர் தெங்கு ஃபக்ரியுடனான தனது அதிர்ச்சிகரமான திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
மலேசிய இளவரசர் தெங்கு ஃபக்ரி, கடந்த 2008ஆம் ஆண்டு இந்தோனேசிய-அமெரிக்க மாடலான மனோகரா ஒடெலியாவை திருமணம் செய்துகொண்டார். அப்போது மனோகராவுக்கு வயது வெறும் 16 தான். அந்த திருமணம் நடந்த ஒரு வருடம் கழித்து தனது கணவரால் தினசரி பாலியல் துஷ்பிரயேகம் மற்றும் உடல் ரீதியான தண்டனைகள் அனுபவித்ததாகக் கூறி மலேசியாவை விட்டு மனோகரா வெளியேறினார். 2009 ஆம் ஆண்டு, ஓர் அரச குடும்பப் பயணத்தின்போது, மனோகரா சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து இந்தோனேசியாவுக்கு வியத்தகு முறையில் தப்பிச் சென்றார். இந்த நிலையில், 33 வயதான மனோகரா விவாகரத்துக்குப் பிறகு மலேசிய இளவரசர் தெங்கு ஃபக்ரியுடனான தனது அதிர்ச்சிகரமான திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில், ’2008இல் நடந்த தனது திருமணம் சம்மதத்துடனோ அல்லது சட்டப்படியோ நடக்கவில்லை. அது ஒரு கட்டாயத் திருமணம். அந்த நேரத்தில், நான் ஒரு சிறுமியாக இருந்தேன், கட்டாயம் மற்றும் சுதந்திரமின்மை என்ற சூழ்நிலையில் இருந்தேன். அதாவது, எனக்கு உண்மையான தேர்வு செய்யும் வாய்ப்போ அல்லது சம்மதம் அளிக்கும் தகுதியோ இல்லை” எனத் தெரிவித்துள்ள அவர், மலேசிய இளவரசருடனான தனது உறவை விவரிக்க ஊடகங்கள் 'முன்னாள் மனைவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவதை அவர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். "பல ஆண்டுகளாக, நான் கட்டுரைகளிலும் தலைப்புச் செய்திகளிலும் "மந்தன் இஸ்திரி [முன்னாள் மனைவி]" என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறேன். இந்த விளக்கம் தவறானது மற்றும் தவறாக வழிநடத்துகிறது என்பதை மரியாதையுடன் தெளிவுபடுத்துவதற்காக இதை நான் எழுதுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

