அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு இந்தியாவில் பலரும் தனித்துவமாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றியை அறுவடை செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று முறைப்படி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு முன்பு விழா நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு பத்து மணிக்கு விழா தொடங்குகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபருக்கும், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸுக்கும் இந்தியாவில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் தனித்துவமாகவும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸின் உருவங்களை தர்பூசணி பழத்தில் வடிவமைத்துள்ளார் கூடலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் என்ற கலைஞர். பழங்களில் சிற்பங்களை வடிவமைப்பதில் திறன் பெற்ற இவர், புதிய அதிபராக பதவியேற்கும் பைடனுக்கும், துணை அதிபராக பதவி ஏற்கும் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசிற்கும் வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு அவர்களின் உருவங்களை வடிவமைத்ததாகக் கூறுகிறார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த ஈஸ்வர ராவ் என்ற கலைஞர் கண்ணாடி பாட்டிலுக்குள் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் உருவத்தை தீட்டியுள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்கும் நிலையில் வாழ்த்துக்கள் என்ற வாசகத்துடன் கண்ணாடி பாட்டிலுக்குள் அவரது உருவத்தை உருவாக்கியுள்ளார்.
இதேபோல் பூரி கடற்கரையில் மண சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் உருவங்களை மணலில் வடிவமைத்துள்ளார்.