ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை - டேடிங் சென்ற இளம் பெண் கைது
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இளம் பெண் ஒருவருடன் டேடிங் செய்த நேரத்தில் அவர் கொலை செய்யப்பட்டார்.
மௌலின் ரதோடு என்ற அந்த மாணவர், 4 வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு படிக்க சென்றுள்ளார். மெல்போர்ன் நகரில் உள்ள சன்பர்ரி பகுதியில் உள்ள அந்தப் பெண்ணின் வீட்டிற்கு நேற்று இரவு சென்றுள்ளார். அங்கு இரவு உணவை முடித்த பின்னர் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து அவசர சேவை அழைக்கப்பட்டது. அப்போது, அவசர சிகிச்சை உதவியாளர்கள் வந்து பார்த்த போது, உயிருக்கு போராடும் நிலையில் ரதோடு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
ஆஸ்திரேலிய போலீசார் அந்த இளம் பெண்ணை கைது செய்தனர். முதலில் உள்நோக்கத்துடன் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், ரதோடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அந்தப் பெண்ணின் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக, மெல்போர்ன் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்.

