செல்ஃபி மோகத்தால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் பலி
ஆஸ்திரேலியாவில் செல்ஃபி மோகத்தால் 40 மீட்டர் உயர பாறையில் இருந்து கீழே விழுந்து இந்திய மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் படித்து வந்த 20 வயது இந்திய மாணவர், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த அல்பானிக்கு சக மாணவர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் இருந்த பாறையில் நின்றபடி மொபைல் ஃபோனில் படம் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாறையில் இருந்து சறுக்கி, 40 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். கடலில் அடித்துச் செல்லப்பட்ட அவரது உடல் ஒரு மணி நேரத் தேடலுக்குப் பின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டது. உயிரிழந்த மாணவரின் பெற்றோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த பாறை உள்ள பகுதிக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டு பாதை மூடப்பட்டிருந்தது. மேலும் அங்கு எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

