விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை : இந்தியருக்கு லண்டனில் ஒருவருடம் சிறை
விமானத்தில் பயணம் செய்யும் போது பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியருக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் ஒருவருட சிறை தண்டனை வழங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியர்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹர்தீப் சிங் (36). இவர் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதியன்று மும்பையிலிருந்து இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரத்திற்கு விமானத்தில் சென்றுள்ளார். 6 மாத சுற்றுலா விசாவில் சென்ற அவரின் அருகே ஓர் பெண் பயணம் செய்துள்ளார். பயணத்தின் போது அப்பெண்ணுடன் பேச்சு வார்த்தை கொடுத்து வந்துள்ளார். பின்னர் இரவில் அனைவரும் உறங்கிய பின்னர் அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து சக பயணிகள் சத்தம் கேட்டு விழித்துள்ளனர்.
அத்துடன் ஹர்தீப் சிங் தவறாக நடந்துகொண்டதையும் கண்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சேர்ந்து சக பயணிகளும் விமான உதவியாளர்களிடம் புகார் அளித்தனர். அவர்கள் மான்செஸ்டர் விமான நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த போலீஸார், விமானம் தரையிரங்கியதும் ஹர்தீப் சிங்கை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை மான்செஸ்டர் மின்ஷுல் சாலை கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹர்தீப் சிங்கை லண்டன் சிறையில் ஒரு வருடம் வரை அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.