அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர், உயிரிழந்த தனது தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கை மேற்கொள்ள வேண்டி இந்தியா வருவதற்காக விசா கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது அவரை அங்கிருந்த தூதரக அதிகாரி ஒருவர் ‘வெளியே செல்லுங்கள்’ என சொல்லி வெளியேற்றி உள்ளார்.
இதனை வீடியோவாக படம் பிடித்த அந்தப் பெண் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
“இது தான் விஜய் ஷங்கர் பிரசாத். விசா கொடுக்கும் பணியை கவனித்து வரும் பொறுப்பு அதிகாரி. இப்படி செய்வது அவரது பொறுப்புக்கு தகுந்த செயலா?” என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் விசா கொடுக்க வேண்டிய இந்திய தூதரக அதிகாரி கோவத்துடன் அந்த பெண்ணின் விண்ணப்பத்தை கொடுக்கிறார். மேலும் விசா வேண்டி அந்த பெண் செலுத்திய கட்டணத்தையும் திரும்பக் கொடுக்கிறார். பின்னர் அந்த பெண், “ஏன் எனக்கு விசா இல்லை என்கிறீர்கள்? ஏன் கோவமாக பேசுகிறீர்கள்?” என கேட்கிறார். ஆனால் அந்த அதிகாரி போனை சுவிட்ச் ஆப் செய்யுமாறு சொல்லிவிட்டு செல்கிறார்.
பின்னர் இந்த வீடியோவை பார்த்த சிலர் உதவியுடன் இந்தியாவுக்கு வந்த அந்த பெண் தனது தந்தைக்கு செலுத்த வேண்டிய இறுதி கடமையை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு உதவியவர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம் : வெஸ்ட் இண்டீஸ் அணியில் அசத்தும் தமிழ் வம்சாவளி வீரர்! யார் இந்த 'வீராசாமி பெருமாள்’?