சீனாவுக்கே ஷாக் கொடுத்த இந்தியா.. செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் புதிய மைல்கல்!
சீனாவைப் போன்று, இந்தியாவும் செயற்கைச் சூரியனை உருவாக்கும் முயற்சியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சூரியனின் மையப்பகுதியில் உள்ளதைப் போன்ற தீவிர வெப்பம் மற்றும் காந்தப்புலத்தை உருவாக்க ஆதித்யா (ADITYA) மற்றும் SST-1 (Steady State Superconducting Tokamak) ஆகிய பிளாஸ்மா சாதனங்களில் வெப்ப நிலையை எட்டி விஞ்ஞானிகள் வெற்றி அடைந்துள்ளனர்.
அண்டை நாடான சீனா, அமெரிக்காவையே விஞ்சும் அளவுக்கு போட்டிபோட்டு வருகிறது. சமீபத்தில், அது ஒரு செயற்கை சூரியனை உருவாக்கும் நோக்கில் இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது, இது உண்மையான சூரியனை உருவாக்குவது அல்ல... மாறாக, சூரியன் எவ்வாறு ஆற்றலை உருவாக்குகிறதோ, அதே செயல்முறையை ஆய்வகத்தில் கட்டுப்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்வதே இதன் நோக்கம். தற்போது இதே சோதனையை நமது இந்தியாவும் செய்துள்ளது. குஜராத்தின் காந்திநகரில் அமைந்துள்ள பிளாஸ்மா ஆராய்ச்சி மையத்தில் (Institute for Plasma Research - IPR) இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதாவது, சூரியனின் மையப்பகுதியில் உள்ளதைப் போன்ற தீவிர வெப்பம் மற்றும் காந்தப்புலத்தை உருவாக்க ஆதித்யா (ADITYA) மற்றும் SST-1 (Steady State Superconducting Tokamak) ஆகிய பிளாஸ்மா சாதனங்களில் வெப்ப நிலையை எட்டி வெற்றி அடைந்துள்ளனர்.
இதன் அணுக்கரு இணைவு உலையில் 82.6 ஜிகாஹெர்ட்ஸ், 400 கிலோவாட் திறன் கொண்ட புதிய 'கைரோட்ரான்' சாதனம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு இயக்கப்பட்டுள்ளது. இது பிளாஸ்மாவை அதிவேகமாகவும் சீராகவும் வெப்பப்படுத்த உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். புதிய கைரோட்ரான் சாதனம் 20 மீட்டர் நீளமுள்ள அலைக்கற்றை கடத்தும் பாதை வழியாக எஸ்.எஸ்.டி-1 உலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. உயர் மின்னழுத்த சோதனைகள், குளிர்ந்த நீர் சுழற்சி அமைப்புகள் மற்றும் மின் இணைப்புகள் அனைத்தும் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு இந்த சாதனம் வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், உலகளாவிய அணுக்கரு இணைவு ஆராய்ச்சியிலும் இந்தியாவின் இடம் உயர்த்தியுள்ளது. குஜராத்தில் எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றம், எதிர்காலத்தில் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வழியை ஏற்படுத்தியிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

