உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் யோசனை தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. 600க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து அமைதியை நிலைநாட்ட முடியும் என்றார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான இந்த போர் நீண்ட காலம் நீடித்தால் அனைத்து நாடுகளுமே அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இம்ரான் கான் கூறினார். உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தொடங்கிய பிப்ரவரி 24ஆம் தேதி இம்ரான் கான் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அதே போல உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பாகிஸ்தான் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் ஒருமாத காலமாக நீடிக்கும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் காரணமாக பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.