ரஷ்யாவால் தாக்குதலுக்குள்ளான அணுமின் நிலையம்... இப்போது என்ன நிலவரம்? உக்ரைன் தகவல்!
ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான சப்ரோசியா அணுமின்நிலையத்தின் மீது ரஷ்யா குண்டுகளை வீசியிருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். தற்போதுவரை அணுமின் நிலையம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து ஒன்பதாவது நாளாக போரிட்டு வருகிறது. கார்கிவ் நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்துடன் ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இந்த நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றும் பட்சத்தில், கருங்கடலில் உக்ரைனின் ஆக்கிரமிப்பும், ராணுவத்தின் செயல்பாடுகளும் வெகுவாக குறுகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் நாட்களில் கார்கிவ் நகரத்தின் மீது தீவிரமான தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் பெலாரஸில் ரஷ்யா, உக்ரைன் அதிகாரிகளிடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உணவு மற்றும் மருந்துகளை வழங்குவது பற்றி பேசப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் இருதரப்பும் இதற்கு ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லாததால், மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையை நோக்கி நகரலாம் என தெரியவந்துள்ளது.
அணு மின் நிலையத்தை சுற்றிவளைத்து நான்குப்புறமும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதால், அணுமின் நிலையத்தில் தீப்பிடித்து இருப்பதாகவும் கூறியுள்ளார். ஒருவேளை இந்த அணுமின் நிலையம் வெடித்தால் அது செர்னோபில் அணு உலை பாதிப்பை விட 10 மடங்கு பெரிதாக இருக்கும் என்றும் டிமிட்ரோ குலேபா அச்சம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உக்ரைன் சார்பில் “சப்ரோசியா அணுமின் நிலையம், தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது” என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: உக்ரைன் போர்: இந்திய மாணவருக்கு காயம் மருத்துவமனையில் அனுமதி?