''அதிபருக்கு எதிரான போராட்டத்தில் தலையிடப் போவதில்லை'' - ரணில் விக்ரமசிங்கே

''அதிபருக்கு எதிரான போராட்டத்தில் தலையிடப் போவதில்லை'' - ரணில் விக்ரமசிங்கே
''அதிபருக்கு எதிரான போராட்டத்தில் தலையிடப் போவதில்லை'' - ரணில் விக்ரமசிங்கே

இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டம் தொடர வேண்டும் என்றும், அதில் தலையிடப் போவதில்லை என்றும் புதிதாகப் பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவையை அமைப்பது குறித்து தாம் முடிவு செய்யவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் இரு தரப்புக்கும் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவேன் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



இலங்கையின் 25 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். பதினைந்து பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. அதிபர் மாளிகையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், ரணில் விக்கிரமசிங்க நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். 225 உறுப்பினர் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியத் தலைவரான ரணில் விக்ரமசிங்க, பிரதமராக பதவியேற்றபின் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான 73 வயது ரணில் விக்ரமசிங்க, 1993 முதல் 1994 வரையிலும், 2001 முதல் 2004 வரையிலும், 2015 முதல் 2018 வரையிலும் இலங்கையின் பிரதமராக இருந்துள்ளார். 2018 ல் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவையடுத்து 2 மாதங்களுக்குப்பிறகு மீண்டும் அவர் பிரதமராக பதவியேற்றார். 2019 ல் ஐக்கிய தேசியக்கட்சியின் அதிபர் வேட்பாளர் தோல்வியடைந்ததையடுத்து அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது மகிந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில் ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.



புதிதாக 15 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்கிறது. நாட்டின் 25 ஆவது பிரதமராக பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு மகிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்தில் ஒரு இடம் கொண்ட ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும். இதற்கிடையே கொழும்புவில் வன்முறைக்கு காரணமான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 16 பேர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திங்கட்கிழமை நேரிட்ட வன்முறை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நமல் ராஜபக்ச மற்றும் 15 பேர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com