‘லோவெல்’ புயலின் வெறியாட்டம்.. 100 மைல் வேகத்தில் சுழன்றடித்த காற்று! பேரிழவின் அதிர்ச்சி!
கடந்த வாரம் முழுவதும் ஹவாயில் கோரத்தாண்டவம் ஆடிய ‘லோவெல்’ புயல், கவாயி தீவின் உயரமான பகுதிகளில் மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று வீசச் செய்து, பல இடங்களில் 12 செ.மீ.க்கும் அதிகமான கனமழையை பொழிந்தது. மவுண்ட் வைஅலே பகுதியில் ஒரே நாளில் 58.42 செ.மீ. மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு, பாலம் மூடல், கடலோர சேதம், மரங்கள், மின்கம்பங்கள் சாய்வு, பரவலான மின்தடை போன்ற பேரழிவுகள் ஏற்பட்டன.
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
ஏறக்குறைய கடந்த ஒரு வார காலமாக ‘லோவெல்’ புயல் ஹவாய் தீவில் கோரத்தாண்டவம் ஆடியது. இந்நிலையில் ஹவாயின் கவாயி, நிஹாவ் தீவுகளுக்கு மேற்குப் பகுதியில் ‘லோவெல்’ புயல் கரையை கடந்துள்ளது. இதனால் பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் சீற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, கவாயி தீவின் உயரமான பகுதிகளில் மணிக்கு 100 மைலுக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹவாய் பல்கலைக்கழக குழு, மாநிலம் முழுவதும் உள்ள வானிலை ஆய்வு நிலையங்களின் தகவல்களையும், உயர் துல்லிய கணினி மாதிரிகளையும் பயன்படுத்தி புயலின் தாக்கத்தை ஆய்வு செய்தது. அதன்படி, ஒரு சில நாட்களுக்கு முன் லிஹூ விமான நிலையத்தில் மணிக்கு 56 மைல் வேகத்தில் காற்று பதிவானது. ஆனால், மலைப்பகுதிகளில் காற்றின் வேகம் 100 மைலையும் தாண்டியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
கனமழையும் பல பகுதிகளில் பதிவானது. ஒரு சில நாட்களுக்கு முன் கவாயி தீவின் பெரும்பாலான பகுதிகளில் 5 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்தது. பல இடங்களில் 12 செ.மீ.க்கும் அதிகமாக கனமழை பதிவானது.
மவுண்ட் வைஅலே பகுதியில் ஒரே நாளில் 58.42 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்தது. மூன்று நாட்களில் மொத்தமாக அங்கு 91.44 செ.மீ வரை மழை பதிவானது. இதனால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, ஹனலெய் பாலம் மூடப்பட்டது. சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
மேலும், கவாயி தீவின் தெற்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் கடல் சீற்றமும், புயல் அலைகளும் ஏற்பட்டதாக பசிபிக் தீவுகள் கடல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், லோவெல் புயலால் கவாயியில் சாலைகள், வீடுகள், கடலோர கட்டமைப்புகள் சேதமடைந்தன; மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து, 90%க்கும் மேற்பட்டோருக்கு மின்தடை ஏற்பட்டது.
புயலின் தாக்கத்தை பொதுமக்களும் மீட்புப் பணியாளர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், ஹவாய் பல்கலைக்கழக குழு ‘ஹரிகேன் லோவெல்’ என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் காற்று, மழை உள்ளிட்ட புயலின் தாக்கத்தை வரைபடங்கள் மற்றும் செயற்கைக்கோள் காட்சிகள் மூலம் நேரடியாகப் பார்க்க முடியும்.
‘லோவெல்’ புயல் கடந்து சென்றாலும், அதன் தாக்கம் ஹவாயின் பல பகுதிகளில் நீடிக்கிறது. பலத்த காற்று, கனமழை, வெள்ளம் மற்றும் கடல் சீற்றம் என இயற்கையின் தீவிரத்தை இந்தப் புயல் வெளிப்படுத்தியுள்ளது.காற்றின் வேகம், மழைப்பொழிவு, வெள்ளம் மற்றும் கடல் சீற்றம் குறித்த இந்த விரிவான தகவல்கள், எதிர்கால புயல்களை எதிர்கொள்ள ஹவாய் மக்களுக்கு முக்கியமான முன்னெச்சரிக்கை தகவல்களாக இருக்கும்.

