\
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!

நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!

நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
Published on

நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நைஜீரியா நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பயங்கரவாதிகள் அவ்வப்போது பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்து அங்கு கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகளை கடத்திச் சென்று அவர்களை பயங்கரவாதச் செயல்களுக்கும், பிணைக் கைதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியின் ஜம்பாரா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவிகள் தங்குவதற்கான விடுதி பள்ளிக்கூடத்திற்கு அருகே அமைந்துள்ளது. அந்த விடுதிக்குள் நேற்று ஆயுதங்களுடன் நுழைந்த பண்டிட்ஸ் பயங்கரவாதிகள், அங்கு தங்கி இருந்த பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றனர். 300-க்கும் மேற்பட்ட மாணவிகளை காணவில்லை என பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.‌ இதையடுத்து அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட மாணவிகளை மீட்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நைஜீரியாவின் காட்சினா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதும் பின்னர் அவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடத்தப்பட்ட சிறுமிகளை பாதுகாப்பாக விரைந்து மீட்கவும், நாட்டில் உள்ள மற்ற பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் நைஜீரியா அரசை ஐ.நா. அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. ''நைஜீரியாவில் பள்ளி குழந்தைகள் மீதான மற்றொரு மிருகத்தனமான தாக்குதலால் நாங்கள் கோபப்படுகிறோம், வருத்தப்படுகிறோம்" என்று நைஜீரியாவின் யுனிசெஃப் பிரதிநிதி பீட்டர் ஹாக்கின்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com