ஒகி புயலால் கனமழை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒகி புயல் தமிழகத்தில் தென்மாவட்டங்களை புரட்டிப் போட்டதுடன் மட்டுமல்லாமல் இலங்கையையும் சூறையாடியுள்ளது. அத்துடன் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். கனமழையின் காரணமாக இதுவரை இலங்கையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடலுக்குச் சென்ற ஐந்து மீனவர்களைக் காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுவரை சுமார் 50ஆயிரம் பேர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கை அதிகாரிகள், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

