பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜமாத் உத் தாவாவின் தலைவர் ஹபீஸ் சயீத் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்பின் புதிய தலைவராக ஹபீஸ் அப்தெல் ரஹ்மான் மக்கி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜமாத் உத் தாவாவின் தலைவர் ஹபீஸ் சயீத். இவர் இந்தியாவில் நடந்த மிகப் பெரிய தீவிரவாத தாக்குதலான மும்பை குண்டு வெடிப்பின் மூளையாக செயல்பட்டவர். இவரது தலைக்கு அமெரிக்க அரசு 10 மில்லியன் டாலர் பரிசு அறிவித்துள்ளது.
ஹபீஸ் சயீத்க்கு எதிரான நடவடிக்கைகளை சமீப காலமாக முடுக்கி விட்டுள்ளது பாகிஸ்தான் அரசு. அதனால் ஹபீஸ் சயீது அவரது கூட்டாளிகள் நான்கு பேரும் பாகிஸ்தான் பஞ்சாப் மாநில அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜமாத் உத் தாவா இயக்கத்திற்கு தலைவராக ஹபீஸ் அப்தெல் ரஹ்மான் மக்கி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஹபீஸ் சயீதின் மைத்துனர். அமெரிக்க அரசு, மக்கியின் தலைக்கும் 2 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.
‘லஷ்கர் இ தொய்பா’ என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர் ஹபீஸ் சயீத். அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், அவர் ‘ஜமாத் உத் தவா’ என்ற இயக்கத்தை நடத்தி வந்தார். இப்போது ஹபீஸ் சயீத் வீட்டு காவலில் வைக்கப்பட்ட பிறகு, அந்த இயக்கத்தின் பெயர் ‘தெஹ்ரீக் அஜாதி ஜம்மு காஷ்மீர்’என மாற்றப்பட்டுள்ளது.