ஹெச்-1பி விசா கட்டண உயர்வு.. ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க வர்த்தக சபை வழக்கு!
புதிய ஹெச்-1பி விசாக்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் 1 லட்சம் டாலர் ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து, அமெரிக்க வர்த்தக சபை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1B விசா விண்ணப்பக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ”H1B விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.90 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும்” என்ற உத்தரவை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். ஹெச்-1பி விசா காரணமாக வேலை இழக்கும் அமெரிக்கர்களை பாதுகாக்கவே விசா கட்டணம் உயர்த்தப்பட்டதாக அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. இது, செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 12 மாதங்கள் வரை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், இதற்கான மாற்று வழிகளையும் அவர்கள் தேடி வருகின்றனர். மறுபுறம், அமெரிக்காவிலேயே இந்தக் கட்டண உயர்வுக்கு மருத்துவர்கள் வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், புதிய ஹெச்-1பி விசாக்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் 1 லட்சம் டாலர் ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து, அமெரிக்க வர்த்தக சபை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இந்தக் கட்டணம் குடியேற்றச் சட்டங்களை மீறுவதாகவும், அமெரிக்க வணிகங்களுக்குப் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் வர்த்தக சபை மனுவில் குறிப்பிட்டுள்ளது. விசா செயலாக்கச் செலவை மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கச் சட்டம் அனுமதிக்கும் நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நிர்வாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.