இலங்கை அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்ச அநுராதபுரத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அதிபராக பதவி ஏற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் கோத்தபய ராஜபக்ச மொத்தம் 69 லட்சத்து 24ஆயிரத்து 255 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 52.25 விழுக்காடு ஆகும். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். இது மொத்த வாக்குகளில் 41.99 விழுக்காடு ஆகும்.
அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பிற வேட்பாளர்கள் மொத்தமாக 5.76 விழுக்காடு வாக்குளைப் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அனைத்து மக்களுக்குமான அதிபராக செயல்படுவதில் உறுதியாக இருப்பதாகவும், இப்பதவி தன் வாழ்நாளில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் என்றும் வெற்றிக்குப் பின் தனது ட்விட்டர் பக்கத்தில் கோத்தபய ராஜபக்ச பதிவிட்டுள்ளார். ஒட்டுமொத்த தேசத்தின் கனவை நனவாக்குவதில் இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.