இலங்கையில் இருந்து கடத்தப்படும் தங்கம்... குறைந்த விலைக்கு விற்க திட்டமிட்டவர்கள் கைது..!
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்த முயன்ற 14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெடுந்தீவு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், அப்பகுதியில் நின்று கொண்டிருந்த படகை சோதனையிட்டபோது அதில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து படகில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்த கடற்படையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் படகில் இருந்த தங்கம் யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் திருடப்பட்ட நகைகள் என்பதும் அதனை அவர்கள் கட்டியாக உருக்கி, தனுஷ்கோடிக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. மேலும் இந்தத் தங்கத்தை சென்னையை சேர்ந்த வியாபாரிகளிடம் விற்பனை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
திருட்டுத் தங்கத்தை விற்க, அவர்கள் இந்தியாவை தேர்வு செய்ததற்கு காரணம் இங்கு தங்கம் மீதான மோகம் அதிகம் என்பதுதான். தங்கம் ஒரு கிராமிற்கு இந்தியாவில் 3 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், கடத்தல் தங்கத்தை இவர்கள், ஆயிரத்து 500 ரூபாய்க்கும் குறைவான விலைக்கே விற்கின்றனர்.
மேலும் மேற்கொண்டு அவர்களிடம் விசாரித்ததில், இந்தியாவைச் சேர்ந்த வியாபாரிகளும் கடத்தல் தங்கத்தை வாங்க அதிக ஆர்வம் காட்டுவதாகக் கூறினர். 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில், இலங்கையில் இருந்து சுமார் 37 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை மட்டுமல்லாது தமிழகத்தை சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, 15 நாட்டுப்படகுகளும், 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

