உலகளவில் உணவு விலை உயர்வு.. 5 முக்கிய காரணங்கள்!
உலகளவில் அரிசி, கோதுமை, எண்ணெய், இறைச்சி போன்ற உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து குடும்பங்களின் மாதச் செலவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. FAO குறியீட்டில் ஜூன் 2026 விலை கடந்த ஆண்டை விட 2.2% உயர்ந்துள்ளது. போர், எரிபொருள் விலை உயர்வு, உரச் செலவு, காலநிலை மாற்றம், போக்குவரத்து தடைகள், வர்த்தகக் கட்டுப்பாடுகள் ஆகியவை இணைந்து இந்த நிலையை உருவாக்கியுள்ளன.
செய்தியாளர் - M. மீரா
உலகின் பல நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அழுத்தத்துக்கு உள்ளாகி வருகிறது. அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு, குடும்பங்களின் மாதச் செலவில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலையை கண்காணிக்கும் FAO Food Price Index, ஜூன் 2026-ல் மே மாதத்துடன் ஒப்பிடும்போது சற்று குறைந்திருந்தாலும், கடந்த ஆண்டை விட 2.2% அதிகமாக இருந்தது.
இந்த விலை உயர்வுக்கு போர் மற்றும் எரிபொருள் விலை உயர்வு முக்கிய காரணங்களாக உள்ளன. மத்திய கிழக்கு மோதலால் எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் விலை உயர்ந்ததுடன், போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்ட இடையூறுகள் உலக உணவு வர்த்தகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தின
அடுத்ததாக உரங்களின் விலை விவசாயச் செலவை அதிகரிக்கிறது. 2026-ன் முதல் ஐந்து மாதங்களில் உலகளாவிய உரங்களின் விலை கடந்த ஆண்டின் அதே காலத்தை விட சுமார் 35% உயர்ந்ததாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உரச் செலவு அதிகரித்தால், விவசாயிகள் உற்பத்தி செலவை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும்; அதன் தாக்கம் இறுதியில் உணவுப் பொருட்களின் விலையிலும் பிரதிபலிக்கும்.
காலநிலை மாற்றமும் மற்றொரு முக்கிய காரணம். அதிக வெப்பம், வறட்சி, கனமழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் பயிர் விளைச்சலை பாதிக்கின்றன. குறிப்பாக 2026-ல் எல் நினோ உருவாகும் அபாயம் அதிகரித்திருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. இது சில பகுதிகளில் அரிசி உற்பத்தியை கணிசமாக பாதிக்கக்கூடும்.
மேலும், உயரும் போக்குவரத்துச் செலவு, வர்த்தகக் கட்டுப்பாடுகள், ஏற்றுமதி தடைகள் மற்றும் உயிரி எரிபொருளுக்கான தேவை ஆகியவையும் உணவுச் சந்தையில் விலை ஏற்றத்தை ஏற்படுத்துகின்றன.
எனவே, உணவுப் பொருட்களின் விலை உயர்வு என்பது ஒரே ஒரு காரணத்தால் ஏற்படுவது அல்ல. போர் , எரிபொருள் , உரம் , காலநிலை மாற்றம் , விநியோகச் சங்கிலி பாதிப்பு என பல காரணிகள் ஒன்றாக இணைந்துள்ளன.

