இதுகுறித்து அவர், “கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் 2021ஆம் ஆண்டு சீரிய முறையில் சென்று கொண்டிருந்த உலக பொருளாதாரம், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால், பாதிக்கும் கீழாகக் குறைந்துள்ளது. இந்தப் போரால், 2022ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் 6.1 என்ற அளவில் இருந்து 3.4 என குறைந்தது. கொரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் கடந்த ஆண்டு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை, இந்த ஆண்டிலும் தொடரும். மேலும், அடுத்த 5 ஆண்டுக்கும் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படும்.
கடந்த 1990ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த அளவு குறைவான வளர்ச்சி இருக்கும் என நாங்கள் அறிவிப்பது இதுவே முதல்முறை. அதேபோல கடந்த 20 ஆண்டுகளாக உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை எடுத்து அதன் சராசரியை கணக்கிட்டுப் பார்த்தால் இந்த காலகட்டங்களில் உலகம் 3.8% வளர்ச்சியை கடக்கவில்லை என்பதை நாம் உணராலாம். வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஆசிய நாடுகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. குறிப்பாக 2023 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் பாதிப் பங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு ஆசிய நாடுகள் கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தின் மந்த நிலை மற்றும் மெதுவான வளர்ச்சி பல்வேறு நாடுகளுக்கு பேராபத்தாக இருக்கப்போகிறது.
கொரோனாவுக்குப் பின் உலகளவில் வறுமையும் பட்டினியும் அதிகரித்து உள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும். 90% வளர்ச்சியடைந்த பொருளாதாரம் கொண்ட நாடுகள் இந்த ஆண்டு சரிவை சந்திக்கும். அதேபோல குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் ஏற்றுமதியில் சிக்கலை சந்திக்கும். எனவே அதிக அளவில் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படும். அர்ஜென்டினா போன்ற அதிக கடன் உள்ள நாடுகளில் நிலைமை மிகவும் சிக்கலானது.
தொடர்ந்து அதிக வட்டி விகிதங்கள், தொடர்ச்சியான அமெரிக்க வங்கியின் வீழ்ச்சிகள் மற்றும் வேகமெடுக்கும் புவிசார் அரசியல் பிரிவுகள் ஆகியவை உலக நிதி ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதாக உள்ளது. அடுத்த வாரம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்தகால கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொருளாதார சுணக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.