டோக்கியோவில் வரலாறு காணாத குளிர்: பிசியான ஆம்புலன்ஸ்கள்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் குளிர் நிலவுகிறது.
ஜப்பானில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் குளிர் நிலவுவது வழக்கம். இந்த வருடம் வழக்கத்தை விட அதிகமாக குளிர் நிலவுவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக வழக்கத்தை விட அதிகமாக, ஆம்புலன்ஸ்களை அழைத்துள்ளனர்.
இதுபற்றி டோக்கியோ தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பொதுவாக குளிர்காலத்தில் அதிகமான அழைப்புகள் எங்களுக்கு வருவது வழக்கம். ஆனால், இந்த முறை கடும் பனி, குளிர் காரணமாக 2,826 அழைப்புகள் வந்துள்ளன. இவ்வளவு அழைப்புகள் இதற்கு முன் ஒருபோதும் எங்களுக்கு வந்ததில்லை’ என்றார்.
டோக்கியோ நகரில் அவசரக் கால சேவை தொடங்கிய கடந்த 1936ஆம் ஆண்டிலிருந்து, குளிர் பாதிப்புகளுக்காக 2,000-க்கும் மேற்பட்டவர்கள் அழைப்பு விடுத்திருப்பது இதுவே முதல்முறை என்றும் அதிகாரிகள் கூறினர்.