மீண்டும் வேலைக்கு.. முன்னாள் பிரதமர் இனி மூத்த ஆலோசகர்!
முன்னாள் பிரதமர் ஒருவர் தனியார் நிறுவனமொன்றில் பணிக்கு சேர்ந்துள்ள சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன விவரம் என பார்க்கலாம்.
இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி சார்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு அந்நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ரிஷி சுனக் தலைமையில் பொதுத் தேர்தலை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி படு தோல்வியைச் சந்தித்தது. தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதே நேரத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற ரிஷி சுனக் எம்பியாக தற்போது தொடர்ந்து வருகிறார்.
ரிஷி சுனக் பிரதமரானபோது, இங்கிலாந்து பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்தது. உக்ரைனில் நடந்த போர் எரிசக்தி விநியோகத்தையும் உலகளாவிய வர்த்தகத்தையும் அசைத்துக்கொண்டு இருந்தது. பணவீக்கம் போன்ற சூழ்நிலைகளையும் அந்நாடு எதிர்கொண்டது.
முன்னதாக, ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டில் பட்டம் பெற்ற பிறகு, ரிஷி சுனக் கோல்ட்மேன் சாக்ஸில் summer intern ஆக சேர்ந்தார். பின்னர் 2001 முதல் 2004 வரை analyst ஆக பணியாற்றினார். இந்நிலையில் தற்போது முன்னாள் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், மூத்த ஆலோசகராக மீண்டும் Goldman Sachs நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
அக்டோபர் 2022 முதல் ஜூலை 2024 வரை பிரதமராகப் பணியாற்றிய சுனக், நியூயார்க்கை தளமாகக் கொண்ட கோல்ட்மேன் நிறுவனத்தில்முதுநிலை ஆலோசகர் பணியில் தொடர்வார் என அந்நிறுவனத்தின் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்குவார். தனது தனித்துவமான கண்ணோட்டங்களையும் நுண்ணறிவுகளையும் பகிர்ந்து கொள்வார் என்று அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சாலமன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ரிஷி சுனக், இந்த நிறுவனத்தில் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் 'தி ரிச்மண்ட் திட்டம்' என்ற அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரிஷி சுனக் வேலைக்கு திரும்புவார் என்ற செய்தி வெளியான நிலையில் அது குறித்தான memes-களும் பகிரப்பட்டு வருகிறது. ரிஷி சுனக்கின் மாமனார் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் பிரபலமான அறிவுரையால் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்வாரா என்பது போன்ற memes-களும் வருகிறது. அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் ஒருவர், மீண்டும் தன் பழைய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.