பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவி பேகம் குல்சூம் நவாஸ் லண்டனில் உயிரிழந்தார்.
தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் லண்டனில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது இறப்பை நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி உறுதி செய்துள்ளது.
இறந்த நவாஸ் ஷெரீப் மனைவி பேகத்தின் இறுதிச் சடங்கு லண்டனில் நடைபெறாது என்றும் அவரது உடல் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளான நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் இருவரும் ராவல்பண்டியில் உள்ள சிறையில் தற்போது உள்ளனர்.
மனைவி இறந்துள்ள நிலையில், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நவாஸ், மகள் மரியம் வெளியே வரலாம் என்று தெரிகிறது. 68 வயதான பேகத்திற்கும் நவாஸ் செரீப்புக்கும் 1971ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.