நேபாளத்தில் அதிர்ச்சி.. அணை உடைந்ததால் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. மீட்புப்பணி நிறுத்தம்!
இமயமலையில் பனிப்பாறை உடைந்து அதிலிருந்த நீர் போதே கோஷி ஆற்றில் பெருவெள்ளமாக பாய்ந்ததால் நேபாளத்தில் நீர்மின் திட்டங்கள், வீடுகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடும் சேதம் அடைந்தனர். 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், திபெத்தில் நீர்த்தேக்க அணை உடைப்பு காரணமாக மீண்டும் வெள்ளப்பெருக்கு உருவாகி, ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நேற்று முன்தினம் பனிப்பாறை உடைப்பு காரணமாக ஏற்பட்ட பேரழிவு உலகையே உலுக்கியுள்ளது. நேபாள் - திபெத் எல்லையில் அமைந்துள்ள இமயமலை பகுதியில் இருந்த பனிப்பாறை தீடிரென உடைந்து அதில் இருந்த ஏராளமான நீர் ’போதே கோஷி (Bhote Koshi)’ ஆற்றில் பாய்ந்து வந்ததால் நேபாளத்தில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது.
சில வினாடிகளில் 9 மீட்டர் வரை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, சுனாமி வேகத்தில் வந்த வெள்ளத்தால் நீர்மின் கட்டமைப்புகள், வீடுகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் அடித்து செல்லப்பட்டனர். இந்த பேரழிவில் இதுவரை 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்தசூழலில் தான் மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும், ஏரி உடையும் அபாயம் இருக்கிறது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் திபெத்தில் உள்ள நீர்த்தேக்க அணை உடைந்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் சேறு கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போதே கோஷி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

