NATO அமைப்பில் இணையும் பின்லாந்து... முக்கியக் காரணம் இதுதான்! ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலா?

NATO (நேட்டோ) அமைப்பில் நாளை முதல் 31வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைய உள்ளது. இது, ரஷ்யாவுக்கு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
நேட்டோவில் இணைந்த பின்லாந்து
நேட்டோவில் இணைந்த பின்லாந்துNATO - twitter

The North Atlantic Treaty Organization என்பதன் சுருக்கமே NATO. இதன் தமிழாக்கம், வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு என்பதாகும். அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுக்கல் உள்ளிட்ட 12 நாடுகளால் கடந்த 1949-ல் உலகப் போருக்குப் பின்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் உருவாகிய ராணுவ கூட்டமைப்பே இந்த நேட்டோ.

இந்த 12 நாடுகளைத் தவிர, அல்பேனியா, பெலாரஸ், ஜெர்மனி, செக் குடியரசு, போலந்து உட்ப்ட 30 நாடுகள் இந்த நேட்டோவில் உறுப்பு நாடுகளாக உள்ளன.

நேட்டோவில் உறுப்பினராக, ஒரு நாட்டைச் சேர்த்துக்கொள்ள அதில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள 30 உறுப்பு நாடுகளும் ஒரு மனதாக ஒப்புதல் தர வேண்டும். அப்படியிருக்க, இந்த நேட்டோவில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இணைவதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பின்னர், நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு துருக்கி சமரசம் அடைந்துள்ளது. இதில் துருக்கியே, நேட்டோ அமைப்பு உருவான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் (1952) நேட்டோவில் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கியை தொடர்ந்து பிற நாடுகளும் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் இணைவதற்கு ஆதரவளித்தன. இந்த நிலையில், நேட்டோவின் செயல்முறைகளுக்குப் பிறகு ரஷ்யாவுடன் எல்லையைப் பகிரும் பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணைய உள்ளது. இதன்மூலம் பின்லாந்து, 31வது உறுப்பு நாடாக நேட்டோ அமைப்பில் இணையும். இதையடுத்து நேட்டோ அமைப்பு, பின்லாந்துக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

பின்லாந்தைப் போன்று ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ளது. என்றாலும், ஸ்வீடன் மீதான விண்ணப்பம் இன்னும் பரீசிலனையிலேயே உள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போருக்கு மத்தியில் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள சம்பவம் உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் நாடு விண்ணப்பித்ததன் காரணத்தாலேயே, ரஷ்யா அந்நாட்டின்மீது கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. உக்ரைனில் தொடுக்கப்பட்டு வரும் போராலேயே பாதுகாப்பு குறித்த அச்சம் பின்லாந்துக்கு வந்ததைத் தொடர்ந்து நேட்டோ அமைப்பில் சேர முயன்றது. அதாவது, உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் நடவடிக்கையை பார்த்த பிறகு, பின்லாந்து இதில் இணைவதற்கு உறுதியானது.

‘உக்ரைனுக்கு பிறகு, தன் நாட்டையும், ரஷ்யா குறிவைக்கலாம். அப்போது ரஷ்யாவை நம்மால் எதிர்க்க முடியாது’ என்பதாலேயே பின்லாந்து இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. இந்த அமைப்பில் இணைவதற்காக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்த பின்லாந்துக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது அந்நாடு நேட்டோவில் இணைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com