நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!

நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!

நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்து இணைவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 200 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மொத்தம் 188 பேர் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இது 75 ஆண்டுகளுக்கும் மேலான ஃபின்லாந்தின் இராணுவ அணிசேராக் கொள்கையில் இருந்து ஒரு வியத்தகு திருப்பம் ஆகும். பின்லாந்து 1917 இல் சுதந்திரம் பெறும் வரை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒருங்கிணைந்த ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பான நேட்டோவானது ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளின் கூட்டணியாக கருதப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பு உருவான போதே கிழக்கை நோக்கி (இப்போதைய ரஷ்யாவை நோக்கி) இது விரிவுப்படுத்தப்பட மாட்டாது என்று சோவியத் யூனியனிடம் நேட்டோ நாடுகள் உறுதியளித்தன. ஆனால் சோவியத் யூனியன் உடைந்த பின்னர், அந்த வாக்குறுதியை மீறி ரஷ்யாவுக்கு அருகே இருந்த 10-க்கும் மேற்பட்ட நாடுகளை தன்னுடன் நேட்டோ இணைத்துக் கொண்டது. இதுபோன்ற சூழலில், ரஷ்யாவுக்கு மிக அருகே இருக்கும் உக்ரைனையும் தன்னுடன் இணைக்க நேட்டோ கூட்டமைப்பு முயற்சி மேற்கொண்டது.

நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணைவதை தடுக்கவே, அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. சுமார் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இப்போரால், உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. ரஷ்யாவின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். எனினும், உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவத்தினரால் இதுவரை கைப்பற்ற முடியவில்லை. இதனால் கீவ்வை சுற்றி வளைத்து ரஷ்ய ராணுவம் குண்டுமழை பொழிந்து வருகிறது.

இந்த சூழலில், ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஸ்வீடனும், ஃபின்லாந்தும் நேட்டோ கூட்டணியில் இணையும் முயற்சியில் இறங்கியுள்ளன. இது ரஷ்யாவுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேட்டோ கூட்டணியில் இணைந்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்த இரு நாடுகளுக்கு ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் ரியாப்கோவ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

"எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற பொது அறிவு கூட இல்லாமல், ஃபின்லாந்தும், ஸ்வீடனும் நேட்டோ கூட்டணியில் இணையும் முடிவை எடுத்திருக்கின்றன. மிக ஆபத்தான தவறினை அவை செய்திருக்கின்றன. பதற்றம் அதிகரிக்கவே செய்யும்" என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com