அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் அலுவலகத்திற்கு வந்த பார்சல் ஒன்றில் நரம்பு மண்டலத்தை பாதித்து மரணத்தை விளைவிக்கும் சரின் என்ற ரசாயனம் இருந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலிபோர்னியாவில் மென்லோ பார்க் என்ற இடத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அஞ்சல் வழியாக பார்சல் ஒன்று வந்துள்ளது. அதனை பரிசோதித்தபோது, அதில் ரசாயனப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நச்சுத்தன்மைக்கொண்ட சரின் என்ற வாயுவாக இருக்கலாம் என அஞ்சப்பட்டது.
இதன் காரணமாக பேஸ்புக்கிற்கு சொந்தமான 4 கட்டடங்களிலிருந்து பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பின் ரசாயன பார்சலால் பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து பணியாளர்கள் கட்டடங்களுக்குள் அனுமதிக்கபட்டனர்.
இது குறித்து தகவல் தெரிவித்த FBI, ''ரசாயனப்பொருள் குறித்து முழுவதுமாக சோதனை செய்யப்பட்டது. அதனால் ஆபத்து ஏதும் இல்லை’’ என தெரிவித்துள்ளனர். ஆனாலும் பார்சல் குறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்