மீட்புப்பணியில் பெரும் முன்னேற்றம்; மீண்டும் மிதக்கத் தொடங்கியது ‘எவர் கிவன்’ கப்பல்!
சூயஸ் கால்வாயில் சிக்கிய 400 மீட்டர் நீள சரக்கு கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக மீட்புக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
தைவான் நாட்டைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான ‘எவர் கிவன்’ கப்பல், கடந்த வாரம் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயின் மணலில் சிக்கிக் கொண்டது. சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையாக திகழ்வதால், அந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 280-க்கும் அதிகமான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன. இதன் காரணமாக சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 9.6 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி) மதிப்புள்ள சரக்கு தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராட்சத இயந்திரங்கள் மற்றும் இழுவைப் படகுகளை வைத்து கப்பலை மீட்கும் பணிகள் இரவுப்பகலாக நடந்து வந்தன. நேற்று வரை 18 மீட்டர் ஆழத்தில் 27,000 கியூபிக் மீட்டர் அளவு மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்திருந்தது. ஒருவாரம் மேற்கொண்ட மீட்புப் பணியின் விளைவாக 'எவர் கிவன்' கப்பல் 80% சரியான திசையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சூயஸ் கால்வாயில் 'எவர் கிவன்' கப்பல் மிதக்கத் தொடங்கியுள்ளது. இதனை எகிப்து அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, சூயஸ் கால்வாயின் இரு முனைகளில் நிற்கும் சரக்குக் கப்பல்கள் விரைவில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.