ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதிரடி - உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்?
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து ரூ.3.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஆனால் திடீரென்று ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த விவரங்களை தராததால் ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்றார். இதையடுத்து எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 28-க்குள் (இன்று) ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது.
இந்த நிலையில் எலான் மஸ்க் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர், கைக்கழுவ பயன்படுத்தப்படும் சிங்க் ஒற்றை கையில் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றார். அதுதொடர்பான வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் ட்விட்டரின் தலைமை அதிகாரி என்று பெயர் அருகே குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ஏற்றுக் கொண்டுவிட்டதாக தகவல் வெளியானது. இந்த ஒப்பந்தத்தை இன்றுக்குள் முடித்துக் கொள்ளப்போவதாக எலான் மஸ்க் தனது பங்குதாரரிடம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்து விட்டார் எனவும் அவர்கள் இனி அங்கே திரும்ப மாட்டார்கள் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: உக்ரைன் நாட்டை விட்டு வெளிவேற மறுக்கும் இந்திய மாணவர்கள் – இந்த நெருக்கடிதான் காரணமா?