”என் பிள்ளை இறந்தப்போ கூட நான் குட்டியை விட்டுட்டு போகல“ - ஆஸ்கர் ஆவணப்பட பெள்ளி பேட்டி

”என் பிள்ளை இறந்தப்போ கூட நான் குட்டியை விட்டுட்டு போகல“ - ஆஸ்கர் ஆவணப்பட பெள்ளி பேட்டி
”என் பிள்ளை இறந்தப்போ கூட நான் குட்டியை விட்டுட்டு போகல“ - ஆஸ்கர் ஆவணப்பட பெள்ளி பேட்டி

யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவணப்படத்தில் நடித்த பெல்லி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிறந்து ஒருசில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட இந்த யானைக்குட்டிகளை பராமரித்து வளர்த்தவர்கள் அங்கு யானை பாகனாக பணியாற்றும் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி. இவர்கள் இந்த யானை குட்டிகளை எவ்வாறு வளர்த்தார்கள் என்பது குறித்த ஆங்கில ஆவணப்படம் ஒன்று கடந்த 2019 ஆம் ஆண்டு எடுத்து வெளியிடப்பட்டது. ‘THE ELEPHANT WHISPERERS’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஆஸ்கர் திரைப்பட விருதிற்கு இந்த ஆவணப் படமும் போட்டியிட்டது. அதில் THE ELEPHANT WHISPERERS ஆவணப்படமானது சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

இதுகுறித்து பெள்ளி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அதில், “ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. யானைக்குட்டியை மட்டும் என் கையில் கொடுக்காமல் இருந்திருந்தால் இது எனக்கு கிடைத்திருக்காது. யானைக்குட்டி எங்களிடம் குழந்தைபோன்று பழகியிருக்கிறது. அதை அப்படியே ஆவணப்படமாக எடுத்துவிட்டார்கள். இன்று விருது கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களுடைய முதுமலை முகாமிற்கே சந்தோஷம்.

யானைக்குட்டிகளை வளர்ப்பதில் மிகுந்த கஷ்டங்களை சந்தித்தேன். வீட்டில் ஒரு கஷ்டம் என்றால் அதைப் பார்க்கமுடியாது. இறப்புக்குக்கூட போகமுடியாது. எங்களுடைய பிள்ளையே நெருப்பில் எரிந்தபோதுகூட போகமுடியாமல் யானைக்குட்டியை பிடித்துக்கொண்டு காட்டுக்குள் நின்று அழுதிருக்கிறேன். குட்டியும் ஒரு குழந்தைதானே. அதை விட்டுவிட்டு போகமுடியாது. அதனை கூட்டிவந்து அதனுடைய இடத்தில் கட்டி வைத்துவிட்டுத்தான் என்னால் போகமுடியும். அப்படி குட்டியை கூட்டிவந்து கட்டி வைத்துவிட்டு, அதனை பார்த்துக்கொள்ள வேறு ஒரு ஆள் வைத்துவிட்டு பிறகுதான் என்னுடைய பிள்ளையையே சென்று பார்த்தேன். நான் பெற்ற பிள்ளை இறந்தபோதுகூட மற்றவர்கள்தான் எடுத்துக்கொண்டுபோனார்கள்.

எனது கை உடைந்தபோதுகூட குட்டியை விட்டுவிட்டு நான் போகவில்லை. இதுபோல் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். இப்படி கஷ்டப்பட்டுத்தான் ரகுவை வளர்த்தேன். ரகு வளர்ந்துவரும்போதுதான் பொம்மி வந்தாள். அதன்பிறகு 6 மாதங்கள் வேலை செய்யாமல் இருந்தேன். பிறகு மீண்டும் என்னை வந்து வேலைக்கு சேரச்சொன்னார்கள். வருகிறவர்கள் எல்லோரும் எனக்கு யானைக்குட்டி எவ்வளவு பழக்கம் என்று கேட்பார்கள். அவை எனக்கு குழந்தைகள் என்று சொல்லுவேன். நான் சொல்கிற பேச்சையெல்லாம் கேட்கும்.

என் பேத்தி, பேரனைப்போலத்தான் யானைக்குட்டிகளும் எனக்கு. இதுவரை அவற்றை நான் அடித்ததே இல்லை. குழந்தைகளிடம் பேசி மட்டும்தான் அவற்றை பழக்கி வைத்திருக்கிறேன் என்று கூறுவேன்” என்று தனது மகிழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com