எகிப்து நாட்டின் வடக்கு சினை மாகாணத்தில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சுமார் 235 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு சினை மாகாணத்தின் தலைநகர் எல்-அரிஷில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராவ்டா மசூதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. மூடப்பட்டிருந்த மசூதியை ஒட்டி முதலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டு சத்தம் கேட்டு வழிபாட்டில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். அப்போது மசூதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த சிலர் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
மக்கள் ரத்த வெள்ளத்தில் மசூதிக்குள் கிடந்தனர். மசூதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக, துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
எகிப்து அதிபர் அப்தெல் பெட்டா அல்-சிசி, பாதுகாப்பு துறை அமைச்சர்களை சந்தித்து நிலவரத்தை கேட்டறிந்தார். கடந்த 4 வருடங்களில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இது என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு எகிப்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.