’வரி விதிப்பு செல்லாது’ - ரத்து செய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்.. சூளுரைத்த ட்ரம்ப்!
அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகளுக்கு வரி விதிப்பை அமல்படுத்தினார். இது உலக அளவில் பேசுபொருளானது. தவிர, வர்த்தக ரீதியாகவும் உறவுகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், ட்ரம்பின் வரி விதிப்பு செல்லாது என கூறி, அதை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இருப்பினும், வரிவிதிப்பு நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என ட்ரம்ப் சூளுரைத்துள்ளார்.
அதிபராகப் பொறுப்பேற்றது முதல், ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், வர்த்தகரீதியாக அமெரிக்காவால் பல நாடுகள் ஆதாயம் அடைந்து வருவதாகவும், அதே அளவு பலன் அவர்களால் தங்கள் நாட்டிற்குக் கிடைக்கவில்லை என்றும் கூறி வந்தார். இதையடுத்து இந்தியா, கனடா, சீனா, மெக்சிகோ என அனைத்து நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கும் வரிகளை அறிவித்தார். இதில் 10% முதல் 50% வரை வரிகள் விதிக்கப்பட்டன. மேலும், பிற நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதத்தில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (பரஸ்பர) வரி விதித்தார். முதலில் இந்தியாவுக்கு 25% வரிகளை டிரம்ப் விதித்தார். பின்னர் ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவதாக கூறி வரிகளை 50% ஆக உயர்த்தினார்.
இந்தநிலையில் சமீபத்தில் இந்தியா -அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியா மீதான வரிகள் 18% ஆகக் குறைக்கப்பட்டது.
இதற்கிடையே, ட்ரம்பின் வரிவிதிப்பு தொடர்பாக சிறு வணிகர்கள் மற்றும் சில மாகாணங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், நாடுகளின் மீதான அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பு செல்லாது எனும் உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய வரி விதிப்பை, தனி மனிதராக ட்ரம்ப் செய்துள்ளார் என கூறியுள்ள நீதிமன்றம், அவர் கூட்டாட்சி விதிகளை மீறியுள்ளதாகவும், அதிபருக்கான அதிகாரத்தை மீறிச் செயல்பட்டுள்ளதாகவும் சாடியுள்ளது. அவசரகால அதிகாரச் சட்டம் வர்த்தகத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரத்தை மட்டுமே அதிபருக்கு அளிப்பதாகவும், புதிய வரிகளை விதிக்க அனுமதி அளிக்கவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இந்த வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 6 நீதிபதிகள் வரிகளுக்கு எதிராகவும், 3 நீதிபதிகள்ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். அதேநேரத்தில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு வெட்கக்கேடான ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், வரி விதிப்புக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பில் நீதிமன்றம் தலையிடுவது முறையல்ல என்று ட்ரம்ப் கூறி உள்ளார். இருப்பினும், வரிவிதிப்பு நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை எனச் சூளுரைத்துள்ள அவர், மாற்றுச் சட்டங்களைப் பயன்படுத்தி 10 சதவீத உலகளாவிய வரியை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

