ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு | தடையை நீக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்!
அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தினார். இதில், கனடா, சீனா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் இறக்குமதி வரியையும், ஏராளமான நாடுகளின் பொருள்களுக்கு கூடுதலாக 10 சதவீத அடிப்படை வரி விதித்தும் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த வரிவிதிப்பு, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்க வேண்டிய நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் அதை நிறுத்திவைத்தார்.
இதற்கிடையே, இந்த உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, நியூயார்க் நகரிலுள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டனர். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையிடப்பட்டது.
அப்போது, வரிவிதிப்பு விவகாரத்தில் வர்த்தக நீதிமன்றத்தின் தடைக்கு அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசின் முறையீட்டை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும், வரிவிதிப்பை நிறுத்திவைப்பது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், தற்காலிகமாக வரி விதிப்பு நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளனர். மேலும், இந்த வழக்குகளில் உள்ள வாதங்களுக்கு ஜூன் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும், நிர்வாகம் ஜூன் 9ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.