’மீண்டும் காட்டாட்சி திரும்பும்..’ - சீன, ரஷ்யா அதிபர்கள் கூட்டறிக்கை.. கடும்கோபத்தில் ட்ரம்ப்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தவும், நல்லுறவை மேம்படுத்தவும் இருநாட்டு அதிபர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றது, உலகளவில் கவனத்தை ஈர்த்தது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தவும், நல்லுறவை மேம்படுத்தவும் இருநாட்டு அதிபர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பின் நிறைவில், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், உட்கட்டமைப்பு, எரிசக்தி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் முக்கியமானதாக மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளில் இருந்து தப்பிக்க, இருதரப்பு வர்த்தகத்தை டாலருக்குப் பதிலாக, சீனாவின் யுவான் மற்றும் ரஷ்யாவின் ரூபிள் கரன்சிகளில் மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் நிதி உள்கட்டமைப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘சர்வதேச சூழ்நிலை மிகவும் சிக்கலாகி வருகிறது. சர்வதேச அமைதி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் புதிய அபாயங்களையும் சவால்களையும் சந்திப்பதுடன், சர்வதேச சமூகம் சிதறுண்டு போவதுடன், மீண்டும் காட்டாட்சி திரும்புவதற்கான அபாயம் உள்ளது. சர்வதேச விவகாரங்களை ஒரு தலைபட்சமாக நிர்வகிக்கவும், தங்களது நலன்களை உலகம் முழுவதும் திணிக்கவும், பல நாடுகளின் வளர்ச்சியை தடுக்கவும் சில நாடுகள் முயற்சி செய்கின்றன’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இரு நாட்டு சந்திப்பு குறித்து சீன அதிபர் ஷீ ஜின்பிங், “மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் பதற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அது உலக வர்த்தகத்தை அடியோடு சீர்குலைத்துவிடும். பேச்சு மூலம் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும். போரை நிறுத்தி, ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தால் மட்டுமே உலகளாவிய எரிசக்தி விநியோகம், தொழில்துறை வினியோகச் சங்கிலி மற்றும் சர்வதேச வர்த்தக ஒழுங்கு ஆகியவை சீர்குலையாமல் தப்பிக்கும்” என்றார்.
அதேநேரத்தில் ஷீ ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புதின் ஆகியோரின் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “இது, அமெரிக்காவிற்கு நல்லதல்ல. தனது ஆட்சியில் இவர்களின் கூட்டணியை உடைக்கப் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

