தைவான்: தனக்குத்தானே கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண் மருத்துவர்!
தைவானை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தனக்குத்தானே கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
நாம் இருவர் நமக்கிருவர் என்றது போய் நாம் இருவர் நமக்கொருவர் என்று மாறி வருகிறது. இதுவும் வரும் காலத்தில், நாமே ஒருவர் நமக்கெதுக்கு ஒருவர் என்றாகிவிடும்போல... இப்படி, பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முக்கியமான ஒன்று, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை.
பொதுவாக பெண்கள் இவ்வகையான அறுவை சிகிச்சை கொள்வது வழக்கமான ஒன்று. ஆனால் பெண்களைவிட ஆண்களுக்கே இந்த அறுவை சிகிச்சை மிக எளிது. ஓரிரு தினங்களில் இந்த அறுவை சிகிச்சை செய்த ஆண்களால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட முடியும். ஆனாலும் இந்தியா போன்ற நாடுகளில், சமூக சூழல் காரணமாக பல ஆண்கள் இந்த அறுவை சிகிச்சைக்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இப்படி ஆண்களுக்கு செய்யும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை வாசக்டோமி என்பர். இந்த அறுவை சிகிச்சையைதான் தைவானை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தனக்குத்தானே செய்துள்ளார்.
தைவானின் தைபேயைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான சென் வெய் நாங், 3 குழந்தைகளுக்கு தந்தை. இவரது மனைவிக்கு 4 ஆவது குழந்தையை பெற்றெடுப்பதில் விருப்பமில்லை என கூறப்படுகிறது. இதை அறிந்து, வாசக்டோமி செய்ய முடிவெடுத்துள்ளார் மருத்துவர் சென் வெய் நாங். இதில் அவர் இன்னும் ஒருபடி மேலே சென்று, தனக்குதானே வாசக்டோமி அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.
இதனை வீடியோவாகவே தனது சமூக வலைதளப்பக்கங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிர்ண்ட இவர், இதற்கான அனைத்து படிநிலைகளையும் விளக்கி, ஆண்களுக்கு கருத்தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
வைரலாகி இருக்கும் இந்த பதிவு 2 மில்லியன் பார்வைகளையும், 61,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. பொதுவாக, 15 நிமிடங்கள் நடைபெறும் இந்த அறுவை சிகிச்சை நடைபெறுவது வழக்கம். ஆனால், இவர் தனக்கு தானே செய்து கொண்டதால், கிட்டதட்ட 1 மணி நேரம் வரை இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பின், தான் நன்றாக இருப்பதை உறுதிபடுத்துவதற்காக, அடுத்த நாள் காலையில் ’நான் நலமாக இருக்கிறேன்’ என்ற மற்றொரு விடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஒருபுறம் இவரது தைரியத்தை பாராட்டும் நபர்கள், மற்றொரு புறம் ’இது முட்டாள் தனம்’ என்றும், ’அறுவை சிகிச்சை நிபுணரால் மட்டுமே செய்ய இயலும்.. இத்தகைய விஷயங்களை தனக்குதானே செய்து கொள்வது என்பது, பலரை தவறான பாதைக்கு கொண்டு செல்லும்’ என்றும் கூறி வருகின்றனர்.