இந்திய மாலுமிகளை பணியில் அமர்த்த வேண்டாம்.. கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!!
ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை முடங்கியிருக்கிறது. இதன்காரணமாக, ஹார்முஸ் மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தசூழலில் தான், நேற்றைய முன்தினம் (செவ்வாய்க்கிழமை) எம்டி மொம்பாசா ( MT Mombasa) மற்றும் எம்டி அல் பஹியா (MT Al Bahiyah) என்ற இரண்டு ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான ரோகன் குமார் உயிரிழந்தார்.
அதேபோல, ஜூலை 12 அன்று எம்.வி. ஜி.எஃப்.எஸ். கேலக்ஸி (MV GFS Galaxy) என்ற வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் புனேவைச் சேர்ந்த ஹெரம்ப் கர்மர்கர் (Herambh Karmarkar) கொல்லப்பட்டார்.மேலும், 10-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் காயமடைந்துள்ளனர். இவ்வாறு, கடந்த 3 நாட்களில் 2 இந்திய மாலுமிகள் உயிரிழ்ந்திருக்கும் நிலையில் தான், மறு உத்தரவு வரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்த வேண்டாம் என மத்திய அரசின் கடல்சார் நிர்வாக இயக்குநரகம் (DGMA) உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் ஏற்கனவே பணியில் இருக்கும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, கப்பல் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும், பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாகப் பின்பற்றவும் அறிவுறுத்தியிருக்கிறது.
உலகளாவிய கப்பல் போக்குவரத்துத் துறையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் பணியாற்றி வரும் நிலையில், மாலுமிகளை வழங்கும் உலகின் 3-வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பாதுகாப்புச் சூழல், இந்திய கடல்சார் துறையிலும், சர்வதேச கப்பல் போக்குவரத்திலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

