கலிபோர்னியா தீ விபத்து: பலி எண்ணிக்கை 31-ஆக உயர்வு
அமெரிக்காவில் கலிபோர்னியா காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடபகுதியில் மலைபிரதேசம் உள்ளது. இங்கு சோனாமா, யூபா உட்பட சில மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள காட்டில் சில தினங்களுக்கு முன் திடீரென தீ பிடித்தது. அப்போது காற்று கடுமையாக வீசியதால், இந்த தீ மளமளவென பரவியது. ஓயின் உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற சோனாமா மாவட்டத்தின் பெரிய நகரான சாண்டா ரோசா நகருக்கும் தீ பரவியது. யாரும் அருகில் நெருங்க முடியாத அளவுக்கு தீ மளமளவென எரிந்துகொண்டிருக்கிறது. இதனால் இந்த நகரில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சாண்டா ரோசா நகரில் மட்டும் 1,500க்கும் மேலான வீடுகள், வணிக மையங்கள், மளிகை கடைகள், சுற்றுலா விடுதிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இந்த விபத்தில் பலியானோர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.