இலங்கை முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது, இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் நாளை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தநிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சுற்றுலாத் துறை முடக்கம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பாதிப்புகளால் வெகுண்டெழுந்த மக்கள் ராஜபக்ச சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வாகன எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கோட்டாபய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இலங்கையில் அவசர நிலையை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக அவசர நிலையை அறிவிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவசர நிலை அறிவிக்கப்பட்டதன் மூலம் நாட்டில் அமைதியை ஏற்படுத்த ராணுவத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.