37,000 அடி உயரத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த விமான ஊழியர்கள்!

37,000 அடி உயரத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த விமான ஊழியர்கள்!
37,000 அடி உயரத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த விமான ஊழியர்கள்!

நடுவானில் விமானத்தின் வாயில் கதவை ஒருவர் திறந்தால் என்னவாகும் என என்றைக்காவது நீங்கள் எண்ணியதுண்டா? அப்படியான செயலைதான் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் செய்துள்ளார். பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் கதவை அவர் திறக்கப் போனதோடு, அதற்காக அவர் கூறிய காரணமும் விமான பணியாளர்களை திடுக்கிடச் செய்திருக்கிறது.

37,000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பயணித்த எலோம் அக்பெக்னினோ என்ற அந்த பெண், பக்கவாட்டுக் கதவைத் திறக்க முயன்றதால், அவர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

டெக்சாசில் இருந்து கொலம்பஸுக்கு சென்றுக் கொண்டிருந்த சவுத் வெஸ்ட் 192 விமானத்தில் பயணித்த 34 வயதான அப்பெண், விமான பணிப்பெண்ணை தள்ளிவிட்டு, விமான கதவை திறக்கச் சென்றிருக்கிறார். இதனால் சக பயணியால் அப்பெண் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்.

மேலும் பயணத்தின் போது தனது இருக்கையில் அமர்ந்திருந்த எலோம், திடீரென விமானத்தின் பின்பக்க கதவுக்கு அருகேவும் சென்று, வெளியே வெறித்து பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அதை கவனித்த விமான பணிப்பெண் “கழிவறைக்கு செல்லுங்கள் அல்லது மீண்டும் உங்கள் இருக்கைக்கே சொல்லுங்கள்” எனக் கூற, எலோமோ அதனை அலட்சியப்படுத்திவிட்டு கதவு வழியாக வெளியே உற்று பார்ப்பதை தொடர்ந்திருக்கிறார்.

சிறிது நேரத்திலேயே, பணிப்பெண்ணை கடந்து சென்று பின்பக்க கதவைத் திறக்க முயன்றிருக்கிறார் எலோம். உடனடியாக விமான ஊழியர்கள் பின்பக்க கதவருகே விரைந்துச் செல்ல, இதனை கண்ட பயணி ஒருவரும் அவர்களுடன் சென்றிருக்கிறார். அதன் பிறகு விமான கதவை திறக்க முயன்றதை தடுத்த நபரின் தொடையில் அப்பெண் பலமுறை கடித்திருக்கிறார்.

இதனையடுத்து பரபரப்பு ஏற்பட்டதையடுத்து ஆர்கன்சாஸில் உள்ள பில் & ஹிலாரி க்ளின்டன் தேசிய விமான நிலையத்தில் சவுத்வெஸ்ட் விமானத்தை அவசரமாக தரையிறக்கியிருக்கிறார் விமானி. அங்கு வைத்து நடுவானில் சலசலப்பை ஏற்படுத்திய பெண் பயணியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறார்கள்.

அதன்படி, ஆர்கன்சாஸின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கடந்த திங்களன்று (நவ.,28) விசாரிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில், பறக்கும் விமானத்தின் கதவைத் திறக்க முயற்சிக்கும் போது எலோம் அக்பெக்னினோ "ஜீசஸ் என்னை ஓஹியோவுக்குப் பறக்கச் சொன்னார், ஜீசஸ் விமானத்தின் கதவைத் திறக்கச் சொன்னார்" என்பதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு, தனது தலையை இடித்துக் கொண்டிருந்தார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட எலோமிடம் விசாரித்ததில், அவர் ஒரு போதகரைச் சந்திக்க மேரிலாந்திற்குச் செல்வதாக அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார் என்றும் அவரிடம் எந்த லக்கேஜும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com